ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிற்கு இந்தியாவின் சார்பில் முதல் பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வாள்வீச்சு வீராங்கன பவானிதேவிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய தாயாரிடம் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தைச் சேர்ந்த செல்வி பவானி தேவி தமிழகத்தின் பாரம்பரிய கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெற்றுள்ளார். அவரின் ஊக்கத்தினையும் விடாமுயற்சியினையும் கருத்தில் கொண்டு அவருக்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மிக்பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பவானிதேவி தற்போது ஜப்பான் நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் சார்பில் வாள்வீச்சு போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி பவானிதேவி என்பதற்கு தமிழ்நாடு அரசு பெருமைக்கொள்கிறது. அவருக்கு தேவையான பயிற்சிகள் பெற அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்துவருகிறது. தற்போது இந்த போட்டிக்காக இத்தாலி நாட்டில் பவானிதேவி பயிற்சி பெற்றுவருகிறார்.
மேலும் சிலபயிற்சிகள் பெற அவர் தமிழ்நாடு அரசிடம் ரூ. 5 லட்சம் நிதியுதவி கோரியிருந்தார். பவானி தேவியின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை அவருடைய தாயாரிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியன் போது அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக எம்பி தயாநிதிமாறனன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஆகியோர் உடனிருந்தனர்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி அரசின் உதவிகோரியது தொடர்பாக நியூஸ் 7 தமிழில் நேற்று செய்தி ஒளிப்பரப்பானது. இந்நிலையில் நியூஸ் 7தமிழின் செய்தியின் எதிரொலியாக தமிழ்நாடு அரசு வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







