ராமேஸ்வரம் கஃபே விவகாரம் : திமுக அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மனு – சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழகத்தை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் திமுக அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே  சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு நீதிமன்றம் மறுப்பு…

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழகத்தை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் திமுக அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே  சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே,  பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனையடுத்து ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களை தொடர்புப்படுத்தி தான் தெரிவித்த கருத்துகளுக்காக ஷோபா மன்னிப்பு கோரினார்.
தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார். மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே வெறுப்பு பேச்சு தொடர்பான தி.மு.க.வின் புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மத்திய அமைச்சர் ஷோபா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வன்முறையைத் தூண்டும் வகையிலும், மதப் பிரச்சினைகளை உருவாக்கும் விதமாகவும் பேசியதாக தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஷோபா பெங்களூரு வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ராஜீவ் கௌடாவை பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன்மூலம் பிரதமர் மோடியில் அமைச்சரவையில் மீண்டும் இணையமைச்சராக இடம்பிடித்தார்.

இந்நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரை ரத்து செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.