தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்; 6 நாட்களில் ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10.08.2022 முதல் 16.08.2022 வரை 1466 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.9,85,300/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில்…

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10.08.2022 முதல் 16.08.2022 வரை 1466 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.9,85,300/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்படும் உணவுப் பொருட்களைக் கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை உட்பட 12 வகையான பொருட்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரை அழகுபடுத்தவும், பசுமைப் பரப்பளவை அதிகரித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடுதல், தீவிர தூய்மைப் பணியின் கீழ் நீண்ட நாள் கழிவுகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசின் அறிவுறுத்தல்களை மீறித் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘மாத்திரை அட்டையில் அழைப்பிதழ்; எப்படியெல்லாம் யோசிக்குறாங்க பாருங்க!’

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10.08.2022 முதல் 16.08.2022 வரை 8,813 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் ஆய்வு மேற்கொண்டு 2,631 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 1,466 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.9,85,300/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் 10.08.2022 முதல் 16.08.2022 வரை 1,492 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 62 கடை உரிமையாளர்களிடமிருந்து 50.9 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7,200/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்கப் பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.