கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 7 நாட்களில், 232 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 332 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. இது வரை கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கி கணக்குகள் முடக்க பட்டு 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
இதுவரை 460 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 1,006 இரண்டு மற்றும் நாண்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையாளர்களும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோதமாக வாங்கிக் குவித்த சொத்துக்களையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர் மற்றும் பதுக்குவோர், விற்பனை செய்வோர் இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் என்று டிஜிபி லைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்தார்.
-இரா.நம்பிராஜன்