புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவையலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில், சந்தேக நபர்களில் 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிபிசிஐடி போலீசார் கடந்த நான்கு மாதங்களாக விசாரணை செய்து வந்த நிலையில் அவர்கள் 147 நபர்களிடம் இதுவரை விசாரணை செய்து சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை உரிய முறையில் விசாரணை செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைப்பதாக அறிவித்தது.
இதையும் படியுங்கள் : தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் சிபிசிஐடி போலீசார், தங்களுடைய விசாரணையில் 11 பேரை சந்தேகப்படுவதாகவும், அவர்களுடைய டிஎன்ஏவை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அதற்கு நீதிமன்றம் உத்தரவு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தன.
இதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று 11 பேர் இடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது. வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பணியாற்றும் காவலர் முரளி ராஜா உட்பட 9 பேர், இறையூர் மற்றும் கீழ முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த இருவர் என மொத்தம் 11 பேரில் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுப்பதற்காக, இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராக, அந்த 11 பேருக்கும் சிபிசிஐடி போலீசார் நீதிமன்ற உத்தரவை அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில பயிற்சி காவலர் முரளி ராஜா, இறையூர் மட்டும் கீழ முத்துக்காட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஆகியோர் மட்டும் இன்று டிஎன்ஏ பரிசோதனைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராகினர். அவர்களுக்கு மட்டும் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.
வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் இன்று டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு நாங்கள் வரமாட்டோம் என்று சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.