அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை? – ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மனு

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இணைந்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிராகரிப்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி…

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இணைந்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிராகரிப்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரிய மூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், 2017-ல் கட்சியின் விதிகளுக்கு முரணாகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இந்த பதவிகளை ஏற்றுக்கொண்டு எந்தவிதமான ஆவணத்தையோ, கடிதத்தையோ தேர்தல் ஆணையம் கட்சிக்குத் தரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடத் தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை. சிவில் நீதிமன்றத்திற்குத்தான் உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக கட்சி தொடர்பான வழக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை எனவும், அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்று எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். விதிமுறைகளுக்கு முரணாக ஜூன் 23-ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் சூரிய மூர்த்தி கோரியுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘’ஏசி ரூம் அதிகாரி நான் அல்ல’ – கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்’

இந்த மனு நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்தபோது அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாள எடப்பாடி பழனிசாமி, இணைந்து நிராகரிப்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனுதாரர் சூரிய மூர்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லாததாலும், அதனால், உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்பதாலும், மனுவை நிராகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

மனுதாரர் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதால் வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என முன் வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, வழக்கு குறித்து சூரிய மூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.