பாமக இளைஞரணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜி.கே.எம். தமிழ்க்குமரன் கட்சி தலைமைக்கு கடிதம் அளித்துள்ளார்.
பாமக இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் தலைவராக கடந்த மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, அக்கட்சியின் கௌரவத் தலைவராக இருக்கும் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன், கடந்த அக்டோபர் மாதம் இளைஞரணித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இளைஞரணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பாமக நிறுவனர் ராமதாஸூக்கு ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் கடிதம் எழுதியுள்ளார். அதில், தாங்களே விரும்பி நியமனக் கடிதம் வழங்கினீர்கள் என்றும் சில சூழ்நிலை காரணமாக இளைஞரணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன், 2.0 போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்த லைகா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக ஜி.கே.எம். தமிழ்க்குமரன் பணியாற்றி வருகிறார் என்பதும், பாமக இளைஞரணித் தலைவராக நியமிக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே அவர் பதவி விலகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.







