மகளிர் காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலருக்கு வளைகாப்பு – சர்ப்ரைஸ் விசிட் அடித்து வாழ்த்துக் கூறிய எஸ்பி!

சூலூர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 2-ம் நிலை பெண் காவலருக்கு சக காவலர்கள் மற்றும் பெண் டி.எஸ்.பி தையல்நாயகி வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூரில் உள்ள கருமத்தம்பட்டி…

சூலூர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 2-ம் நிலை பெண் காவலருக்கு சக காவலர்கள் மற்றும் பெண் டி.எஸ்.பி தையல்நாயகி வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் இந்து பிரியா.  இவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  இந்த நிலையில் இந்து பிரியாவுக்கு வளைகாப்பு செய்ய உடன் பணியாற்றும் காவலர்கள் மற்றும் ஆய்வாளர் சுமதி ஆகியோர் முடிவெடுத்தனர்.

அதன்படி காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.  பாரம்பரிய முறைப்படி வளையல் அணிவித்து மஞ்சள்,  சந்தனம்,  குங்குமம் உள்ளிட்ட திரவியங்களுடன் 10 வகையான உணவுகளை வைத்து காவலர் இந்து பிரியாவுக்கு வளைகாப்பு நடத்தி வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு!

இந்த வளைகாப்பு நிகழ்வை காவல் துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி முன்னின்று நடத்தினார்.  அப்போது சூலூர் காவல் நிலையத்துக்கு வந்திருந்த மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன்,  மகளிர் காவல் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்து அங்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார்.

மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் உள்ளே நுழைந்ததும் கர்ப்பிணியான இந்து பிரியாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.  மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்களே சக காவலருக்கு வளைகாப்பு செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.