புதுக்கோட்டை அருகே 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சுபாஸ் சந்திரபோஸ். இவரது மனைவி பவித்ரா (22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உறவினர்கள் அவரை இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புதுக்கோட்டை ராணியர் மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பவித்ராவை ஏற்றிக் கொண்டு புதுக்கோட்டை ராணியர் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பவித்ராவிற்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.
இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, பைலட் தேவபாஸ்கரன் ஆகியோர் சாலையோரம் ஆம்புலன்ஸை நிறுத்தி கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். அதில், சுகப்பிரசவத்தில் பவித்ராவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதைத்தொடர்ந்து, தாயும், சேயும் புதுக்கோட்டை ராணியர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.