பாஜகவினர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தவுள்ளதையடுத்து தலைமைச்செயலகம் செல்லும் சாலையில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்த நிலையில், அவற்றின் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது. இதுபோலவே தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென பாஜக, அதிமுக வலியுறுத்தின. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரசுக்கு 72 மணி நேரம் கெடு விதிக்கிறோம். அதற்குள் விலையைக் குறைக்க வேண்டும். இல்லையெனில் கோட்டையை முற்றுகையிடுவோம் என அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனினும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளதாக அமைச்சர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்காத பாஜக தலைவர் அண்ணாமலை, 31ஆம் தேதி கண்டிப்பாக கோட்டையை நோக்கி பேரணி நடைபெறும் என அறிவித்தார்.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், சென்னை எழும்பூரிலிருந்து கோட்டையை நோக்கி பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தொடங்க உள்ள பேரணியில் பங்கேற்க பாஜகவினர் வருகை தந்துள்ளனர். இதனால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமைச் செயலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து, பேருந்து உள்ளிட்ட வாகனங்களை சோதனைக்கு பின்னரே அனுமதியளித்தனர்.