திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டு தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபி, சத்யா தம்பதிக்கு கடந்த 19-ம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் இவரை வார்டு மாற்றி உள்ளனர். அப்போது நான்கு நாட்களாக பிரசவ வார்டில் சுற்றித் திரிந்த பெண் ஒருவர் லிப்டில் செல்லும் போது குழந்தைக்கு தாங்காது நான் படியில் எடுத்து வருகிறேன் என நைசாக பேசி குழந்தை வாங்கி உள்ளார்.
வேறு தளத்திற்கு சென்று குழந்தையை பெண்மணி கொண்டு வராததால் மீண்டும் சத்யா அதே இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் சத்தியாவிடம் குழந்தையை அவரின் மாமியாரிடம் கொடுத்து விட்டதாக தெரிவித்து தனது பையை எடுத்துக்கொண்டு அவசரமாக வெளியேறினார். குழந்தை மாமியாரிடமும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்து சத்யா அலற துவங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து மருத்துவர்கள் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தெற்கு உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 5 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இந்த பெண் திட்டமிட்டு குழந்தையை கடத்தி உள்ளாரா என சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்தில் அவர் இடுவாய், வாசுகி நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியம்மாள் (42) என்பது தெரியவந்தது.
வீட்டில் இருந்த அவரை உடனடியாக பிடித்து போலீசார் அவரிடமிருந்து குழந்தையை மீட்டனர். விசாரணையில் தனக்கு குழந்தை இல்லாததால் திருடினதாக கூறியுள்ளார். தன்னை பற்றி கேட்பவர்களிடம் தனக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது என பொய்யாக தெரிவித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல 4 நாட்களாக சுற்றித்திரிந்ததாகவும் சந்தர்ப்பம் கிடைத்ததும் குழந்தையை கடத்திச் சென்றதாகவும் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவரை கைது செய்து குழந்தையை தாயார் சத்யாவிடம் 12 மணி நேரத்தில் ஒப்படைத்தனர். போலீசாருக்கு பராட்டுகள் குவிந்து வருகிறது.
—-அனகா காளமேகன்