உலக கவிதை தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா ‘கவிதை என் ஆத்மாவின் வெளிப்பாடு, கவிதை எழுதும்போது என்னை நான் முழுமையாக உணர்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற ஆயுஷ்மான் குரானா ’அந்தாதூன்’, ’டிரீம் கேல்’, ’விக்கி டோனார்’ போன்று பல படங்களில் நடித்துள்ளார். இவருக்குப் புதிதாகக் கவிதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இரு வரிகளில் கவிதை எழுதுவது தனக்குப் பிடித்த விஷயம் என்று அவர் கூறியுள்ளார். கடந்த வருடம் கோவிட்- 19 தொற்றால் மக்கள் சந்தித்த இன்னல்களைப் பற்றி இவர் எழுதிய கவிதைகள் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இன்று உலக கவிதை தினம் என்பதால், கவிதை தன்னை எப்படி வசீகரித்தது என்ற அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ”எனது வாழ்க்கையின் மகிழ்ச்சி, காதல், வலி, என்ற எல்லா உணர்வுகளைக் கவிதை மூலம் வெளிப்படுத்துகிறேன். கடந்த காலத்தில் ஏற்பட்ட சுவையான அனுபவங்களைக் கவிதை மூலம் வெளிப்படுத்துவதால், அது மனநிறைவை ஏற்படுத்துகிறது. உச்சக்கட்ட வலியையும் உச்சக்கட்ட மகிழ்ச்சியையும் அனுபவித்தால்தான் கவிஞராக மாற முடியும் என்பதில்லை. கவிதை எனது கற்பனை வெளியை விரிவுபடுத்துகிறது. எதிர்காலத்தின் கற்பனைகளுக்கு இழுத்துச் செல்லும் வாகனமாகக் கவிதை உள்ளது.’கவிஞராக இருப்பது ஒரு வேலை அல்ல .கவிஞராக இருப்பது ஒரு நிலை’என்று கவிதை தொடர்பாக ராபர்ட் கிரேவ்ஸ் கூறியது என்னை அதிகம் ஈக்கும் வாக்கியம். என்னைப் பொருத்தவரை கவிதை என்பது என் ஆத்மாவின் வெளிப்பாடு. ஒவ்வொருமுறை நான் எழுதும்போதும் என்னை நான் முழுமையாக உணர்ந்துகொள்ளமுடிகிறது” எனக் கூறியுள்ளார்.







