ஆண்களின் காதல் தோல்வியை மையமாக கொண்ட பல பாடல்கள் வெளியான நிலையில், பெண்களின் காதல் தோல்வியை மையமாகக் கொண்டு வெளியான பாடல் ஒன்று தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
இந்த உலகம் காதலால் தான் இயங்கி வருகிறது. காதல் என்ற ஒற்றை சொல்லுக்கு பின்னால் இருக்கும் வலிகள் ஏராளம். கணவனால், காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் சர்வதேச கீதமாக இந்த பாடல் மாறியுள்ளது என்றால் அந்த வரிகளுக்கு இருக்கும் சக்திதான் இதற்கு காரணம். இலங்கை, கிழக்கு மாகாணம் பொத்துவில் பகுதியை சேர்ந்த கவிஞர் அஸ்மின் தான் இந்த பாடலை எழுதியுள்ளார். உலகம் முழுவதும் 1 கோடிக்கும் அதிகமான ரசிகர்களால் ’ஐயோ சாமி’ பாடல் ரசிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
விஜய் ஆண்டனி நடித்த’ நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’தப்பெல்லாம் தப்பே இல்லை’
பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இலங்கை கவிஞர் பொத்துவில்
அஸ்மின். இவர் ஏற்கனவே விஸ்வாசம், அண்ணாத்த படங்களுக்கு எழுதிய புரோமோ
பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர்
ஜெயலலிதாவின் இரங்கல் பாடலையும் இவரே எழுதியுள்ளார்.
காதல் வலிகள் அதிகம் நிறைந்த ’ஐயோ சாமி’ பாடலை இலங்கையின் தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் சனுக விக்ரமசிங்கே இசையமைக்க, பாடகி வின்டி குணதிலகா பாடியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் ரசிக்கப்பட்டு வரும் இந்த பாடல் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மொழி தெரியாமலேயே உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ’மனிகே மாகே ஹிதே’ பாடலை போல் இலங்கையில் இருந்து வெளிவந்துள்ள இந்த பாடலும் அனைத்து இசை ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது என்றே கூறலாம்.
– தினேஷ் உதய்







