கிராமப்புறங்களில் தடுப்பூசி குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாமில் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இன்று காலை மதுரை மாவட்டம் கடச்சநேந்தல் பகுதியில் உள்ள சிறப்பு முகாமில் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
“மதுரையில் இன்று ஒரு நாள் மட்டும் இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவது குறித்து ஊடகங்கள் வாயிலாக விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது அலையால் தமிழ்நாட்டில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுவது போல சித்தரிக்கப்பட்டது. ஆனால் இந்த பாதிப்புகள் 10 நாட்களுக்குள் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததன் விளைவாக பாதிப்புகள் குறைந்தது. கிராமப்புறங்களில் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. தடுப்பூசி மையங்கள் வெறிச்சோடிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
https://twitter.com/pmoorthy21/status/1436923775577047040
இதனையடுத்து கிராமப்புறங்களில் முழுவதுமாக விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது. மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பஞ்சாயத்துகள் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று அமைச்சர் கூறினார்.








