அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 24 காளைகளை பிடித்து கார்த்திக் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை அவனியாபுரத்தில் காலை 7.30 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. ஜல்லிக்கட்டு முதல் மாட்டினை அமைச்சர் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். 7 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட வீரர்கள் சீறிவந்த காளைகளை பிடித்தனர். இந்நிலையில் போட்டியை காண்பதற்காக வந்திருந்த மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற 18 வயது இளைஞர் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுமார் 624 காளைகள் போட்டியில் கலந்துகொண்டன. 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்ட போட்டியில் 24 காளைகளை பிடித்து கார்த்திக் முதலிடம் பிடித்தார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை பிடித்து 2-வது இடம் பிடித்த முருகனுக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 11 காளைகளை பிடித்து 3 -வது இடம் பிடித்த பரத் என்பவருக்கு பசுங்கன்று பரிசாக வழங்கப்பட்டது.
போட்டியில் சிறப்பாக செயல்பட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மணப்பாறை தேவசகாயத்தின் காளைக்கு முதல் பரிசும், ராமு என்பவரின் காளைக்கு இரண்டாம் பரிசும், பிரதீஷ் என்பவருக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.