சேலத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்த சகோதரர் சொத்துக்களை அபகரிக்க முயல்வதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சித்த சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர், அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதனிடையே இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்கள் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தங்கவேல் தனது சகோதரர் தர்மலிங்கம் என்பவரிடம் கந்து வட்டிக்கு பணம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிக வட்டியுடன் கூடுதல் தொகை கேட்டு சகோதரர்கள் தர்மலிங்கம், பன்னீர்செல்வம் மற்றும் தாய் ஆகிய மூவரும் தனக்கு நெருக்கடி கொடுப்பதாக தங்கவேல் போலீசில் புகாரளித்தார். அத்துடன் தற்போது பணம் கொடுக்க தாமதமான நிலையில், தனக்குரிய சொத்துக்களை மிரட்டிப் பெற மூவரும் முயற்சிப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு அவர் தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்தி நிறுத்தினர்.







