ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ர தாண்டவம் ஆடியதால் பாகிஸ்தான் அணிக்கு 368 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். பாகிஸ்தான் பந்து வீச்சை ஓட ஓட விரட்டினர். ருத்ரதாண்டவம் ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இருவரும் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு இருந்த நிலையில் மார்ஷ் 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த ஸ்மித் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய வார்னர் 163 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பிறந்தது. அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொதப்பலாக விளையாடினர். இதனால் 400 ரன்கள் குவிக்க வேண்டிய ஆஸ்திரேலியா 367 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 5 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பாகிஸ்தான் பவுலர்கள் அனைவரும் அடித்து துவைக்கப்பட்ட நிலையில், அப்ரிடி மட்டும் 10 ஓவர்களில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார். அதோடு 10 ஓவர்கள் வீசி 54 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்தார். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலிய அணி 368 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.







