அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், பீகாரில் பாஜக முக்கியத் தலைவர்கள் 10 பேருக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது. இளைஞர்களை 4 ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் பணியில் அமர்த்தும் வகையில் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தத் திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இத்திட்டதை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. வடமாநிலங்களில் ராணுவத்தில் சேர ஆர்வத்துடன் இருக்கும் இளைஞர்கள், அக்னிபாத் திட்டம் வேலை பாதுகாப்பு அளிக்கவில்லை எனக் கோரி கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வன்முறையும் வெடித்தது.
தெலங்கானாவில் செகந்திரபாத் ரயில் நிலையத்தில் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் ரயில்வே போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பீகாரில் பாஜக முக்கியத் தலைவர்களின் வீடுகளை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
![](https://i0.wp.com/news7tamil.live/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-19-at-9.56.15-AM.jpeg?resize=1280%2C719&ssl=1)
பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில், “போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தவில்லை. இதில் சதி அடங்கியிருக்கிறது” என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் கூறுகையில், “பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டக்காரர்களுக்கு எதிரான ஏன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.
பீகாரில் நவாடா, மதுபானி, மதேபுரா ஆகிய பகுதிகளில் உள்ள பாஜக அலுவலகங்களில் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக முக்கியத் தலைவர்கள் 10 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்தது.
பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், துணை முதலமைச்சர் ரேணு தேவி உள்ளிட்டோருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்களின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதீஷ் குமார் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
-மணிகண்டன்