சென்னையில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஏடிஎம் மையங்களில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை கண்டறிவதற்கு செயலியை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏடிஎம் மையங்களில் எவ்வளவு பணம் உள்ளது என கண்டறிய பிரத்யேக செயலியை ஹரியானா கும்பல் பயன்படுத்தி இருப்பது தலைவனிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் எஸ்.பி.ஐ டெபாசிட் ஏடிஎம்களை குறிவைத்து ஹரியானா கும்பல் கைவரிசை காட்டி 1 கோடி ரூபாய் வரை கொள்ளை அடித்து சென்றனர். இது தொடர்பாக சென்னை தனிப்படை போலீசார் ஹரியானாவிற்கு விரைந்து கொள்ளையில் ஈடுபட்ட அமீர் அர்ஷ், வீரேந்தர், நஜீப் ஹுசைன், மற்றும் ஒரு கொள்ளை கூட்டத்தின் தலைவனான சவுகத் அலி ஆகிய நான்கு பேரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்த சிறையில் அடைத்தனர்.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட தலைவனான சவுகத் அலியை பெரியமேடு போலீசார் நேற்று 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக பெரியமேடு எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் மட்டுமே 190 முறை ஸ்வைப் செய்து 16 லட்ச ரூபாயை ஹரியானா கும்பல் கொள்ளையடித்து சென்றது. 15 மற்றும் 16ஆம் தேதி என இரு தினங்களில் சவுகத் அலியும்,17 மற்றும் 18 ஆம் தேதி வேறு நபர்கள் என பிரித்து பெரியமேடு ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் கொள்ளையடிப்பதற்காக செல்லக்கூடிய ஏடிஎம் மையங்களில் பணம் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை அறிவதற்காக ஹரியானா கொள்ளையர்கள் செயலி ஒன்றை உருவாக்கி செல்போனில் பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. அந்த செயலியை பயன்படுத்தியே ஹரியானா கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் எஸ்.பி.ஐ ஏடி எம் இயந்திரங்களில் கொள்ளையடிப்பது குறித்தான முழு பயிற்சியை ஹரியானாவில் மேற்கொண்டு கொள்ளையில் ஈடுபட்டதும், போலீசாரிடம் சிக்கினால் விசாரணையின் போது எப்படி பதிலளிக்க வேண்டும் என்ற பயிற்சியையும் ஹரியானா கும்பல் மேற்கொண்டிருப்பது சவுகத் அலியிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. சவுகத் அலியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தொடர்ந்து மழுப்பலாகவே பதிலளித்து வருவதால் போலீசார் வேறு யூக்தியை கையாள முடிவு செய்துள்ளனர். மேலும் ஒரு கொள்ளை கும்பலின் தலைவன் சவுகத் அலி என்பதால் எஸ்.பி.ஐ ஏடி எம்மில் கொள்ளையில் ஈடுபட்டது எப்படி என நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் கொள்ளையர்கள் பயன்படுத்திய செயலியின் பெயர் என்ன,கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்த விவரங்களை சவுகத் அலியிடம் விசாரிக்க பெரியமேடு போலீசார் முடிவு செய்துள்ளனர்.







