திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் பயன்படுத்தப்பட்ட கார், திருப்பதியில் திருடப்பட்டது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் இரண்டு தினங்களுக்கு முன் இரவு மர்ம நபர்கள் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதேபோன்று தேனிமலை மற்றும் போளூர் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதனையும் படிக்க : திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; வங்கி மேலாளர்களுக்கு டிஜிபி அறிவுரை
மேலும், கலசபாக்கம் பகுதியில் உள்ள இந்தியாஒன் ஏடிஎம் மையத்திலும் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 4 ஏடிஎம் மையங்களிலும் மொத்தம் 80 லட்சம் ரூபாய் வரை கொள்ளை போனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர் பயன்படுத்திய கார் மற்றும் அதிலிருந்து இறங்கிச் செல்லும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது.
கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டதாகவும், அவர்களை தனிப்படை போலீசார் விரைந்து பிடித்து விடுவதாகவும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்த நிலையில் ஹரியானா மாநிலம் நூக் மாவட்டம் மேவாட் என்ற பகுதியை சார்ந்த கொள்ளை கும்பல்தான் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொள்ளை கும்பல் கண்டெய்னர் லாரிகளில் திருடப்பட்ட கார்களுடன் ஆந்திர மாநிலத்தை கடந்து சென்றுள்ளது. இதனால் கொள்ளையர்கள் வாகனம் குறித்து ஆந்திரா தெலங்கானா எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையும் படிக்க : திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 காவலர்கள் பணியிடமாற்றம்

இந்த கொள்ளைக்கு பயன்படுத்திய டாடா சுமோ கோல்டு கார் திருப்பதியில் திருடப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. காரின் உரிமையாளர் திருப்பதி காவல்நிலையத்தில் இது தொடர்பாக ஏற்கெனவே புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
– யாழன்








