திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; வங்கி மேலாளர்களுக்கு டிஜிபி அறிவுரை

திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தின் எதிரொலியாக ஏடிஎம் மையங்களில் முகத்தை அடையாளம் காட்டக் கூடிய மென்பொருள் கொண்ட கேமராக்களை பொருத்த டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில்…

திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தின் எதிரொலியாக ஏடிஎம் மையங்களில் முகத்தை அடையாளம் காட்டக் கூடிய மென்பொருள் கொண்ட கேமராக்களை பொருத்த டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் இரண்டு தினங்களுக்கு முன் இரவு மர்ம நபர்கள் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதேபோன்று தேனிமலை மற்றும் போளூர் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மேலும், கலசபாக்கம் பகுதியில் உள்ள இந்தியாஒன் ஏடிஎம் மையத்திலும் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 4 ஏடிஎம் மையங்களிலும் மொத்தம் 80 லட்சம் ரூபாய் வரை கொள்ளை போனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர் பயன்படுத்திய கார் மற்றும் அதிலிருந்து இறங்கிச் செல்லும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது.

கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டதாகவும், அவர்களை தனிப்படை போலீசார் விரைந்து பிடித்து விடுவதாகவும்  தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்த நிலையில்  ஹரியானா மாநிலம் நூக் மாவட்டம் மேவாட் என்ற பகுதியை சார்ந்த கொள்ளை கும்பல்தான் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொள்ளை கும்பல் கண்டெய்னர் லாரிகளில் திருடப்பட்ட கார்களுடன் ஆந்திர மாநிலத்தை கடந்து சென்றுள்ளது. இதனால் கொள்ளையர்கள் வாகனம் குறித்து ஆந்திரா தெலங்கானா எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஏடிஎம் மையங்களில் தொடர் கொள்ளை நடைபெற்றது தொடர்பாக  தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் வங்கி மேலாளர்கள் மற்றும் வங்கி பொறுப்பு அதிகாரிகளுக்கு உடனான கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் 51 வங்கிகளின் பொது மேலாளர்கள் மற்றும் வங்கி பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது வங்கி மற்றும் ஏடிஎம்களில் உள்ள பணத்தை கண்காணிக்க மறைமுக கேமராக்கள் நிறுவப்பட வேண்டும் என்றும் முகத்தை அடையாளம் காணக்கூடிய மென்பொருள் கொண்ட  கேமராக்கள் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் பொருத்தப்பட வேண்டும் என்றும் காவல்துறை இயக்குநர் தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார்.

அதேபோல் வங்கி ஏடிஎம்களில் இயந்திரம் உடைக்கப்படும் பொழுது வங்கியில் அலாரம் ஒழிக்க வேண்டும் என்றும், வங்கி ஏடிஎம் மையம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திலும் அலாரம் ஒலிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பொழுது தான் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, வங்கி பொது மேலாளர் மற்றும் பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.