ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் நடிகர் ஆர் கே சுரேஷ் சுமார் 15 கோடி ரூபாய் வரை பணம் பெற்று இருப்பதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேரை குற்றவாளிகளாக சேர்த்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி உள்ளிட்ட 11 பேர் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசாரால் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். மோசடி செய்யப்பட்ட பணத்தில் இதுவரை ரொக்கமாக 5 கோடியே 69 லட்சம் ரூபாயும், 1 கோடியே 13 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் முடக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களின் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்களும் கண்டறியப்பட்டன.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல நடிகரும், தயாரிப்பாளரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. அதேபோல அண்மையில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி ஹரீஷையும் 4 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் நடத்திய விசாரணையிலும், ஆருத்ரா மோசடியில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் தொடர்பு குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பாஜகவில் ஓ.பி.சி பிரிவு மாநில துணைத் தலைவராக இருந்து வரும் ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா மோசடி வழக்கில் இருந்து தனக்கு வேண்டப்பட்டவர்களை காப்பாற்ற உதவி வந்ததாக தகவல் வெளியானது. அதேபோல ஆருத்ரா இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் மற்றும் கைது செய்யப்பட்ட ரூசோ ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஆர்.கே.சுரேஷ் வங்கிக் கணக்கிற்கு கோடிக் கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராகவில்லை என கூறப்பட்டது.
விசாரணைக்கு ஆஜராகாத நடிகர் ஆர்.கே.சுரேஷ், போலீசாரின் சம்மனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவர் போலீசாரிடம் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாக பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கில் டான்பிட் நீதிமன்றம் எனப்படும் தமிழ்நாட்டு முதலீட்டார்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.பாபு சில நாட்களுக்கு முன்பு குற்றப்பத்திரிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். 50 பக்க அளவிலான குற்றப்பத்திரிக்கையில், முதற்கட்டமாக 360 புகார்களில் தொடர்புடைய 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழகிற்கு தொடர்புடைய 3,000 பக்கம் அளவிலான கூடுதல் ஆவணங்களை ஒரு நாட்களில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் நடிகர் ஆர் கே சுரேஷ் சுமார் 15 கோடி ரூபாய் வரை பணம் பெற்று இருப்பதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 20ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதில் நடிகர் ரூஸோவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரூஸோவிடமிருந்து சுமார் 15 கோடி அதிகமான பண பரிவர்த்தனையானது ஆர் கே சுரேஷ்க்கு சென்றுள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்ததும் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் கட்ட குற்ற பத்திரிகையை பொருளாதார குற்றப்பிரிவு பிரிவு போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக , 500 முகவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் இதுவரை 800 கோடி ரூபாய் வரை பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு சமன் அனுப்பி விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். தேவைப்பட்டால் அவர்களை கைது செய்தும் அவர்களுடைய பணம் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா