டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரோஜர் பெடரர் ஓய்வு அறிவிப்பு ஏற்று கொள்ள முடியவில்லை என்று அர்ஜென்டினா வீராங்கனை நாடியா பொடோரோஸ்கா தெரிவித்துள்ளார்.
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் நாடியா பொடோரோஸ்கா, ஜெர்மனியின் டாட்ஜானா மரியாவை இரண்டாம் சுற்றில் எதிர்கொண்டார். இந்த தொடரிலேயே மிகவும் பரபரப்பான போட்டியாக இந்த போட்டி அமைந்தது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போரட்டத்திற்கு பிறகு, அர்ஜென்டினாவின் பொடோரோஸ்கா 3-6, 6-2, 7-6 என கைப்பற்றி, டை பிரேக்கரில் 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, அர்ஜென்டினாவின் நாடியா பொடோரோஸ்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாடியா பொடோரோஸ்கா, இன்றைய போட்டி மிகவும் கடினமான ஒரு போட்டி என்றார். தான் முதலில் சில தவறுகளை செய்தேன். இருந்தாலும் இரண்டாவது செட் விளையாடும் போது உறுதியாக இருந்தேன். டை பிரேக்கரில் நான் 5-1 என இருந்த போதும் கூட தளராமல் விளையாடினேன் என கூறினார்.
பின்னர் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரோஜர் பெடரர் ஓய்வு அறிவித்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நாடியா பொடோரோஸ்கா தன் தலைமீது கைவைத்து இதனை ஏற்று கொள்ள முடியவில்லை என தெரிவித்தார். இந்த செய்தி தன்னை ஸ்தம்பித்து போக வைத்துள்ளதாகவும் அதிர்ச்சியடைந்தார்.







