உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அறநிலையத் துறை கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும், அறங்காவலர்கள் உள்ள கோயில்களில் அவர்கள் மூலமாகவே நியமிக்கப்பட்டு வருவதாகவும், அறங்காவலர்கள் இல்லாத கோவில்களில் அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட தக்கார்கள் மூலமாக அர்ச்சகர்கள் நியமிக்கப்பவதாக விளக்கம் அளித்தார்.
இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டுமென கூறி, அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர். அதேசமயம் அந்த நியமனங்களால் பாதிக்கப்பட்டதாக கருதும் நபர்கள் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம் என அறிவுறுத்தினர். அர்ச்சகர்கள் நியமிக்க பின்பற்றப்படும் விதிகளை எதிர்த்த வழக்குகளை அடுத்தக்கட்ட விசாரணைக்காக நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.







