ஆட்டோ முன்பதிவுக்கு செயலி உருவாக்குவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
பொது போக்குவரத்தில் பெரும் பங்களிப்பைச் செய்து வரும் ஆட்டோக்களில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே கட்டணம் தொடர்பாக நிலவி வரும் மோதலைத் தடுக்க தமிழ்நாட்டில் செயலி ஒன்றை அரசே உருவாக்கிட வேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர், செயலாளரைச் சந்தித்த ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக, கேரளாவில் டாக்சி, ஆட்டோவுக்கான முன்பதிவு செயலியைக் கடந்த 17-ஆம் தேதி முதல் அரசே தொடங்கி அதைச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த செயலியில் பேனிக் பட்டன் உட்பட அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாகச் செயலியில் வாகனங்களை இணைக்கக் காவல் துறையின் சான்று கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை; இன்று நேரலையாக ஒளிபரப்பு!’
இந்நிலையில், இதே போன்ற அம்சங்களுடன், அரசே ஒரு செயலியை உருவாக்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், திருத்தியமைக்கப்பட்ட ஆட்டோ கட்டணமும் விரைவில் நடைமுறைக்கு உள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் முயற்சிகள் நடைமுறைக்கு வந்தால், மாநிலம் முழுவதும் உள்ள 3.20 லட்சம் ஆட்டோக்களை நம்பி வாழும் 4.50 லட்சம் ஓட்டுநர்களும், பொதுமக்களும் பயன்பெறுவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.