பெரம்பலூரில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் மீதான
விசாரணை அறிக்கையின் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய பணி ஓய்வு அளித்து திருச்சி சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அலுவலக
கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்தவர் ஹரிஹரன். இவரிடம், மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர், தனக்கு நிலுவையிலுள்ள பணப் பலன்களை வழங்கக் கோரி கடந்த 2021 செப்டம்பர் மாதம் விண்ணப்பித்தபோது, அப்பெண் காவலருக்கு ஹரிஹரன் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், தொடர்ந்து செல்போன் மூலம்
குறுஞ்செய்தி அனுப்பியும், நேரிலும் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணியிடம்
புகார் அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தப் புகாரின்பேரில் ஹரிஹரன் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், ஹரிஹரன் அங்கு சென்று பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்து
அளித்த அறிக்கையின்படி, பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என்பது
தெரியவந்ததையடுத்து ஹரிஹரனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி
சரவணசுந்தர் உத்தரவிட்டார். ஹரிஹரன் மீது அலுவல் ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஹரிஹரன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க
காவல்துறை சார்பில் விசாகா குழு அமைக்கப்பட்டது. அக்குழு அண்மையில் அறிக்கை
அளித்தது. அந்த அறிக்கையில் ஹரிஹரன் மீது, பெண் காவலர் அளித்த
குற்றச்சாட்டுகள் உண்மை எனத் தெரியவந்தது. மேலும், அவர் பணியிடத்தில் தொடர்ந்து பெண்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர், பெரம்பலூர் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர், அலுவலக கண்காணிப்பாளர் ஹரிஹரனுக்கு கட்டாய பணி ஓய்வு அளித்து உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் ஹரிஹரனுக்கு வழங்கப்பட்டது.
-ம.பவித்ரா