ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

கோபி அருகே தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகனின் தந்தை, மாமனார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக இருப்பவர் ராமேஸ்வர…

கோபி அருகே தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகனின் தந்தை, மாமனார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக இருப்பவர் ராமேஸ்வர முருகன் (55). இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த வெள்ளாங்கோவில். இங்கு அவருக்கு சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தாய் மற்றும் தந்தை வசித்து வருகின்றனர். ராமேஸ்வர முருகன் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து வீட்டில் தங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ரேகா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் வெள்ளாங்கோவில் உள்ள ராமேஸ்வர முருகன் தந்தை வீட்டிற்கு சோதனையிடுவதற்காக வந்தனர். வீட்டில் ராமேஸ்வர முருகனின் தாய், தந்தை மட்டும் உள்ளனர். வீட்டிலிருந்து வெளியே யாரும் செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியே இருந்து யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் சோதனையிட்டு வருகின்றனர்.

இதேபோல் ராமேஸ்வர முருகனின் மாமனார் அறிவுடைநம்பி வீடு ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ளது. இவர் அதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டிற்கும் இன்று காலை வந்த லஞ்ச ஒழிப்புத்துறை, அவரது வீட்டிலும் சோதனையிட்டு வருகின்றனர்.

ராமேஸ்வர முருகன் பள்ளி கல்வித் துறை இணை இயக்குநராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள, News7 Tamil – ன் WhatsApp Channel– ல் இணைய – க்ளிக் செய்யுங்கள்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.