முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடி சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள…

அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அவருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடி சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,  மன்னார்குடி, கோவை, திருச்சி, தஞ்சை, சென்னை, திருவாரூர் ஆகிய இடங்களில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முதல் இந்த சோதனை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்ட பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காமராஜ், 2015ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள அவருக்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக விசாரணை செய்யயப்பட்டது.

மேற்கண்ட விரிவான விசாரணையின்போது, அவர் 01.04.2015 முதல் 31.03.2021 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியை தவறாகப் பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58,44,38,252/ அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது.

இந்த விரிவான விசாரணையின் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.4/2022 சட்டப் பிரிவுகள் 120(B) of IPC, 13(2) r/w 13(1) (c), 13(2) r/w 13(1) (e) r/w 109 IPC, 13(2) r/w 13(1) (b) 12 r/w 13(2) r/w 13(1) (b) of PC Act as amended in 2018-ன் படி (1) திரு.காமராஜ், முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர், (2) Dr.M.K.இனியன், 3) Dr.K.இன்பன், 4) திரு.R.சந்திரசேகரன் 5) திரு.B.கிருஷ்ணமூர்த்தி மற்றும் 6) திரு.S.உதயகுமார் மீது 07.07.2022ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.