அண்ணாமலையின் வேட்பு மனு சர்ச்சை – மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம்!

கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனு தொடர்பான சர்ச்சைக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில்…

கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனு தொடர்பான சர்ச்சைக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது. வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது.

வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில் கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கலில் விதிமீறல் உள்ளதாக கூறி நாம் தமிழர், அதிமுக உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் அண்ணாமலை வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி விளக்கம் அளித்துள்ளார்.

“வேட்பாளர் அண்ணாமலை தரப்பில் இரண்டு வேட்பு மனுக்கள் இரண்டு பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒரு வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மற்றொரு வேட்பு மனு ஏற்கப்பட்டது. வேட்புமனுவிற்கான பிராமண பத்திரம் தள்ளுபடி செய்யப்பட்ட வேட்புமனுவினுடையது. நேற்று இரவு தள்ளுபடி செய்யப்பட்ட வேட்புமனுவின் பிராமணப்பத்திரம் பதிவேற்றப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.