இலங்கை கடற்படையினரின் அராஜகப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த 8 மீனவர்கள் கோடியக்கரையில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதோடு அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்துள்ளது. ஒருசில நாட்களுக்கு முன்னர் தான் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இலங்கை கடற்படையின் இச்செயலுக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு தொடந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இலங்கை கடற்படையினரின் அராஜகப் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.
மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்து , இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் தடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








