தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், திமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடப்பட்டி முத்தையா (வயது 77) மதுரையில் உடல்நல குறைவால் காலமானார்.
தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவரான சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 3 மாதங்களாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.
சேடப்பட்டி முத்தையா 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தார். 1977, 1980, 1984, 1991 ஆகிய 4 முறை சேடப்பட்டி சட்டமன்ற தொகுதியிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் சேடப்பட்டியார் என அழைக்கப்பட்டார்.
பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 2 முறை பதவி வகித்த சேடப்பட்டி முத்தையா 1999 ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2006 ல் அதிமுகவிலிருந்து விலகிய சேடப்பட்டி முத்தையா தொடர்ந்து திமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். டேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா எனும் மனைவியும், 2 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர், இளைய மகன் மணிமாறன் திமுகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்
மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகேயுள்ள முத்தப்பன்பட்டியில் அவரது இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. அஞ்சலி செலுத்துவதற்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.







