தேனி அருகே மதுகுடிக்க மகன்களிடம் கையேந்தும் நிலைமை வந்ததால் முதியவர் ஒருவர் தூக்குபோட்டு உயிரை மாய்த்துக்
கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
தேனி மாவட்டம் விஸ்வதாஸ் நகரை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் தேனி கர்னல் ஜான்
பென்னிகுயிக் பஸ் நிலையம் அருகே உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்க்கு எதிரே கடை நடத்தி வந்தார்.
இவர் நேற்று அதிகாலையில் தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்றார். காலையில் அவர் வீட்டுக்கு சாப்பிட வருவது வழக்கம். ஆனால் நேற்று சாப்பிட வராததால் அவருடைய குடும்பத்தினர் கடைக்கு சென்று பார்த்தனர். அப்போது கடையின் ஷட்டர் கதவு அடைக்கப்பட்டு இருந்தது. ஷட்டரை திறந்து பார்த்த போது கடைக்குள்
இருந்த மின்விசிறியில் தர்மராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார்.அதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூக்குப்போட்ட போது அவர் தனது நாக்கை கடித்து கொண்டதால் ரத்தம் வெளியேறி அறை முழுவதும் ரத்தம் உறைந்து கிடந்தது.இதுகுறித்து தர்மராஜின் மனைவி
முத்துலட்சுமி தேனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தனது கணவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், மதுகுடிக்க மகன்களிடம் கையேந்தும் நிலை வந்ததால் மன உளைச்சலில் உயிரை மாய்த்துக்
கொண்டதாகவும் கூறினார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







