எம்.எல்.ஏ. என்பவர் தொகுதியின் காப்பாளராக இருக்க வேண்டும் – தவெக தலைவர் விஜய் பேச்சு..!

எம்.எல்.ஏ என்பவர் தொகுதியின் காப்பாளராக இருக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் தவெக வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 30 வேட்பாளர்களையும் தவெக தலைவர் விஜய் அறிமுகம் செய்து வருகிறார். அதன் படி பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார்.

முன்னதாக நிகழ்ச்சியில்  பேசிய விஜய், ”நம் மக்களுக்கு தேர்தலை சந்தித்த அனுபவம் இல்லை என கூறுவார்கள். நமது வேட்பாளர்கள் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். பெரிய பின்புலம் கிடையாது.

ஒரு எம்.எல்.ஏ எப்படி இருக்க வேண்டும் என நான் கூறுகிறேன். எம்.எல்.ஏ என்பவர் அனுபவத்தை வைத்துக்கொண்டு கொள்ளையடிப்பவராக இருக்க கூடாது. அனுபவத்தை வைத்துக்கொண்டு சட்டவிரோதமாக கல்குவாரியில் ஈடுபடுபவர்களாக இருக்க கூடாது.

வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் திமுகவில் இருந்து வந்த ஒரு எம்.எல்.ஏ மேல் கொள்ளை வழக்கு, போதைப்பொருள் கடத்தல் வழக்கு, திருட்டு வழக்குகள் உள்ளது.

அந்த எம்.எல்.ஏ யார் என்று யோசிக்கத் தோன்றும். அவர்கள் கூட்டணியில் மூச்சுக்கு 300 முறை முட்டுக் கொடுக்கக்கூடிய தலைவருக்கு எதிராக 1996ல் எம்.எல்.ஏவாக நிற்க வைத்தார்கள். மரியாதை நிமித்தமாக அந்த தலைவரின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை.

எம்.எல்.ஏ என்றால் அந்த தொகுதி மக்களுக்காக எல்லை காப்பாளர்களாக  இருக்க வேண்டும்.

கட்சி ஆரம்பித்து மூன்று வருடங்கள் மேல் ஆகிவிட்டது ஆனாலும் ஒரு கூச்சலின் சத்தம் அடங்கியதாக தெரியவில்லை. கூட்டம் ஓட்டாக மாறுமா என வன்மத்தில் கேட்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்

இந்த தேர்தல் இருமுனை போட்டி தான். மக்கள் கூட்டணியான நமக்கும் ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் தான் இந்த போட்டி” என்றார்.

தொடர்ந்து “மக்களுக்காக மக்கள் பணிக்காக மட்டுமே நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் ஜெயித்து வந்த பிறகு மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொட மாட்டேன்” என தவெக வேட்பாளர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.