கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்கு சிறை தண்டனை அனுபவித்த நிரபராதிக்கு இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரமக்குடி நகர பாஜக செயலாளர் முருகேசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்ட முகமது, மனோகரன் இழப்பீடு கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில், பரமக்குடி நகர பா.ஜ.க. செயலாளர் முருகன் என்ற முருகேசன், கடந்த 19.3.2013 அன்று வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பரமக்குடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் வழக்குபதிவு செய்து, எங்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், முகமது இஸ்மாயில் என்ற பன்னா இஸ்மாயில் ஆகியோர் தான் என்று கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். எங்களை விடுவித்தனர்.
கொலை வழக்கில் எங்களை சிறையில் அடைத்ததால், அவமானம் தாங்காமல் சொந்த ஊரில் இருந்து வேறு இடத்திற்கு குடும்பத்துடன் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இதற்கு காரணமான இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடவும், எங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி புகழேந்தி, முருகேசன் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்றதால் அனுபவித்த துன்பங்களுக்காக மனுதாரர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். ராஜாமுகமதுவுக்கு ரூ.10 லட்சத்தையும், மற்றொரு மனுதாரர் மனோகரனுக்கு ரூ.8 லட்சத்தையும் இழப்பீட்டு தொகையாக 16 வாரத்தில் அரசு செலுத்த வேண்டும். இந்த தொகையை தற்போது தர்மபுரி மாவட்டத்தில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ரத்னகுமாரிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம் என உத்தரவிட்டார்.








