தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்றும் முயற்சி தான் இந்த காசி தமிழ் சங்கமம் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
உத்திர பிரதேச மாநிலம் காசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில்
பங்கேற்க தமிழகத்திலிருந்து புறப்படும் பக்தர்கள் வசதிக்காக சென்னை எழும்பூர்
ரயில் நிலையத்திலிருந்து இருந்து காசிக்கு செல்லும் ரயிலை தமிழக ஆளுநர்
ஆர்.என்.ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ் மக்களின் இதயங்களில் காசி வாழ்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் கனவை நனவாக்கும் வகையில் இந்த பயணம் நிறைவேற்றும். நீண்ட காலமாக நம் நாட்டில் உள்ளதை மீண்டும் அறிமுகப்படுத்த பிரதமர் மோடியின் முயற்சி இது. ஒரே பாரதம் தான் உன்னத பாரதம், அதற்கு இதுவே உதாரணமாக திகழ்கிறது என்று புகழாரம் சூட்டினார்.

மேலும், இந்தியாவை புரிந்து கொண்டவர்கள் பாரதத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் காசிக்குப் போக வேண்டும், காசியிலிருந்து மக்கள் இங்கே வர வேண்டும். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் அதுவே பாரதம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கும், வாரனாசிக்கும் கலாச்சார ரீதியாகவும்,
பண்பாடு ரீதியாகவும் தொன்று தொட்டு தொடர்பும், ஒற்றுமை இருந்து வருகிறது.
அதை மீட்கும் வகையில் இந்த காசி தமிழ் சங்கமம் நடக்கிறது. இரண்டு ஊர்களுக்கும் இடையே இருந்த கலாச்சார தொடர்பை ஏற்படுத்தும் வகையில் 1 மாதத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.







