துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளையில் ஈடுபட முயற்சி செய்த சம்பவம் தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் அருகே துணிவு பட பாணியில் பொம்மை துப்பாக்கி மற்றும் போலி
வெடிகுண்டுகளை காட்டி வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் கனரா வங்கியில் ஊழியர்கள் காலை 11 மணியளவில் வழக்கம் போல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாலிபர். திடீரென வெடிகுண்டு மற்றும் துப்பாக்கியை காட்டி வங்கி அதிகாரிகளை மிரட்டி கொள்ளையடிக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். இருப்பினும்
வங்கியில் இருந்த பொதுமக்கள் சமயோசிதமாக செயல்பட்டு வாலிபரை மடக்கிப்
பிடித்தனர் இதையடுத்து, வங்கி அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு
விரைந்து சென்ற அலங்கியம் போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த பொம்மைதுப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை செய்ததில் அந்த வாலிபர் அலங்கியம் காந்தி நகர் பகுதியில் சேர்ந்த சுரேஷ் (19) என்பதும், அவர் தனியார் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு படிப்பதும் தெரியவந்தது.
சமீபத்தில் நடிகர் அஜித் நடித்த துணிவு படத்தை பார்த்து அதில் வருவது போல் வங்கியில் கொள்ளை அடிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து வங்கி மேலாளர் சுகந்தி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சுரேஷை, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திரைப்படத்தைப் பார்த்து கல்லூரி மாணவர் வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற
சம்பவம் அலங்கியம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
– யாழன்







