ரூ.12 லட்சம் வழிப்பறி…132 கிமீ சிசிடிவி காட்சிகளை பார்த்து கொள்ளையர்களை தட்டித் தூக்கிய போலீசார்!

சேலம் தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் கத்திமுனையில் ரூ.12 லட்சத்தை பறித்து சென்ற 4 கொள்ளையர்களை 132 கிமீ தூரம் வரையிலான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அதிரடியாக கைது செய்துள்ளனர் அம்மாப்பேட்டை காவல்துறையினர்.  சேலம்…

சேலம் தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் கத்திமுனையில் ரூ.12 லட்சத்தை பறித்து சென்ற 4 கொள்ளையர்களை 132 கிமீ தூரம் வரையிலான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அதிரடியாக கைது செய்துள்ளனர் அம்மாப்பேட்டை காவல்துறையினர். 

சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை,  உடையாப்பட்டி பைபாஸ் அருகில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த நிறுவனத்தில் கடந்த ஜூன் 14- ஆம் தேதியன்று மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கிய கடனில் வசூலான ரூ.12 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஊழியர்கள் யுவராஜ் (வயது 40), குமார் (வயது 23) ஆகியோர் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர்.

உடையாப்பட்டி நூல் மில் அருகே சென்று கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரையும் வழிமறித்து,  கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்றுள்ளனது.  இதையடுத்து,  ஊழியர்கள் உடனடியாக அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் பால்ராஜ், சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தினார். அதேபோல்,  கொள்ளையர்கள் தப்பிச் சென்ற வழித்தடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் ஆய்வுச் செய்தனர்.

குறிப்பாக,  அயோத்தியாப்பட்டணம்,  வாழப்பாடி,  தம்மம்பட்டி,  செந்தாரப்பட்டி வரையிலான 55 கிமீ தூரம் வரையிலான சிசிடிவி காட்சிகளையும்,  சேலம் ராசிபுரம் – செந்தாரப்பட்டி வழியாக 77 கிமீ தூரம் வரையிலான சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில்,  செந்தாரப்பட்டியில் கொள்ளையர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றது தெரிய வந்தது.

இதனைவைத்து வழிப்பறி செய்தவர்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என சந்தேகித்த காவல்துறையினர் செந்தாரப்பட்டியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் அதே நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களான செந்தாரப்பட்டியைச் சேர்ந்த ரவியின் மகன் புவனேஸ்வரன் (வயது 21), செந்தில்குமார் மகன் சுபாஷ் (வயது 22) மற்றும் அவர்களின் கூட்டாளிகளான கஜேந்திரன் (வயது 23), விக்னேஷ் (வயது 32) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.  இதனையடுத்து அவர்கள் நால்வரையும் அதிரடியாக கைது செய்த போலீசார் ரூபாய் 4.50 லட்சம் ரொக்கம், 4 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.  முன்னதாக, கைதானவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மேலும் 5 பேருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் கொடுத்த தகவலின் பேரில், காவல்துறையினர் திருச்சி மாவட்டம் துறையூரில் முகாமிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.