அம்மா மினி கிளினிக் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தான் மூடப்பட்டதாகவும், பழிவாங்கும் நோக்கத்துடன் அல்ல எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டின் முதல் சட்டப் பேரவை கூட்டத் தொடர் புதன் கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து இரண்டாவது நாளான இன்று பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் தொடர்ச்சியாக சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மா மினி கிளினிக் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மக்களின் நன்மைக்காக கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் அம்மா கிளினிக் திட்டம் அவசர கோலத்தில் முறையான கட்டமைப்பு இல்லாமலும் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் கூறினார்.
மேலும், தற்போது அம்மா மினி கிளினிக் தேவையில்லை என குறிப்பிட்ட அவர், இது பழிவாங்கும் நோக்கம் அல்ல எனவும் தெரிவித்தார்.
ஊராட்சிகளில் சுகாதார நிலையங்கள் சிறப்பாக செயல்படுவதால், அம்மா மினி கிளினிக் திட்டம் தேவையில்லை என அரசு கொள்கை முடிவெடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அப்போது எழுந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அம்மா உணவகத்தை மூடினால் தான் என்ன? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அம்மா உணவகத்தை மூடினால் அதற்கான தண்டனையை நீங்கள் அனுபவிப்பார்கள் என்று தெரிவித்தார்.
இதற்கு குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டுவந்த திட்டங்களை நீங்கள் மூடியதற்கான தண்டனையை தான் தற்போது நீங்கள் அனுபவித்து வருவதாக தெரிவித்தார்.