திருமங்கலம் அருகே அமெரிக்க மகனுக்கு தமிழ் கலாசாரம், பண்பாடு குறித்து கலை நிகழ்ச்சிகளுடன் பெற்றோர் விழா எடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பன்னிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள்
சுதாகர் – ஜெயபுவனா தம்பதி. இவர்கள் அமெரிக்காவில் உள்ள கலிபோனியா நகரில் குடியுரிமை பெற்று சுதாகர் மென்பெறியாளராகவும், ஜெயபுவனா அரசு பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களது ஒரே மகனான மனு என்பவர் அமெரிக்காவிலேயே பிறந்து அங்கேயே வளர்ந்து தற்போது 22 வயதை கடந்த நிலையில், கடந்த வாரம் மூன்று பேரும் சொந்த ஊருக்கு வருகை தந்துள்ளனர்.
தமிழ் கலாச்சாரம், சொந்த பந்தங்கள் குறித்து தனது அமெரிக்க மகன் அறிந்து கொள்ளும் வகையில் கலாச்சார விழா எடுக்க முடிவெடுத்த இந்த தம்பதி, இன்று திருமங்கலம் அருகே தனியார் மண்டபத்தில் கலாச்சார விழா நடத்த திட்டமிட்டு இரண்டு நாட்களுக்கு முன்பே அனைத்து சொந்த பந்தங்களுக்கும் தகவல் அளித்துள்ளனர்.
அதன்படி இன்று நடைபெற்ற விழாவில் சொந்த பந்தங்கள் பாரம்பரிய முறைப்படி தாய்மாமன் சீர் ஊர்வலம், தாய்மாமன் மாலை அணிவிப்பு நிகழ்வு, உறவினர்களை அறிமுக படுத்துவது என துவங்கிய இந்த விழாவில் தமிழ் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி அமெரிக்க மகனை நெகிழ்ச்சியடைய செய்தனர். என்னதான் அமெரிக்க குடியுரிமை பெற்று வாழ்ந்தாலும் தனது மகனுக்கு தமிழ் பாரம்பரியத்தையும், தங்கள் சொந்த பந்தங்களையும் அடையாளம் காட்டிய பெற்றோர்களை அனைவரும் பாராட்டினர்.
- பி.ஜேம்ஸ் லிசா







