துர்நாற்றம் வெளியேறும் குப்பைகள் மறுசுழற்சி மையம் – இடமாற்றம் செய்யகோரி பொதுமக்கள் ஆர்பாட்டம்!!

ராஜபாளையத்தில் செயல்படும் குப்பைகள் மறு சுழற்சி மையத்தினால் காற்று மாசு உள்ளிட்ட, பல்வேறு பிரச்சனைகளை எதிர்த்து இடம் மாற்றம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர், ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 31, 32 வது வார்டில்…

ராஜபாளையத்தில் செயல்படும் குப்பைகள் மறு சுழற்சி மையத்தினால்
காற்று மாசு உள்ளிட்ட, பல்வேறு பிரச்சனைகளை எதிர்த்து இடம்
மாற்றம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர், ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 31, 32 வது வார்டில்
திருவனந்தபுரம் தெரு, நேதாஜி தெரு, மங்காபுரம், முத்தன் தெரு உள்ளிட்ட பகுதிகளில்
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 4 வருடங்களுக்கு
முன்னதாக மங்காபுரத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில், நகராட்சி சார்பில்
குப்பைகளை மறு சுழற்சி செய்யும் நுண் உரசெயலாக்க மையம் கட்டப்பட்டது. இந்த
மையம் கட்டும் போதே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், பொது மக்கள் எதிர்ப்பையும் மீறி நுண் உரசெயலாக்க மையம் கட்டப்பட்டது.
நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு நாள்
கணக்கில் தேக்கி வைக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் 15 நாட்கள் வரை இருப்பு
வைக்கப்பட்டு, மக்கிய பின்னர் உரமாக்கப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும்
துர்நாற்றம் மற்றும் காற்று மாசு காரணமாக, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று
நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாமல்,
தினமும் சுவாசக்கோளாறுகளுக்கு ஆளாகி வருவதாகவும், வேதனை தெரிவித்தனர்.
இந்த மறு சுழற்சி மையத்தை இடம் மாற்றக்கோரி, பல முறை ஆட்சியரிடம் மனு
அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 31 வது வார்டு திமுக கவுன்சிலர் ராதா கலந்து கொண்டார்.

அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவரும் குப்பை கிடங்கை இடம் மாற்றக் கோரியும், தூய்மையான சுவாசம் வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். மேலும், தங்கள் கோரிக்கைகளை அரசும், மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் நிறைவேற்ற வேண்டும் எனக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.