திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 26ம் தேதி அறவழிப்போராட்டம் நடைபெறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக எம்பி ஆ.ராசா இந்துக்களை இழிவாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதனை இந்து முன்னணியினர் மற்றும் பாஜக கடுமையாக கண்டித்தது.
இந்நிலையில் இந்துகளை இழிவாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து அறப்போராட்டம் நடத்தபோவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில், தமிழரின் மாண்பையும் தமிழரின் மரபையும், தமிழரின் தொன்மையையும், இறை நம்பிக்கையையும், இழிவுபடுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழகத் தாய்மார்களை, தமிழினத்தை அவமதிக்கும் கருத்திற்கு, கோவை மாவட்டத்தில் ஜனநாயக ரீதியாக, எதிர்ப்பு தெரிவித்த, பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 26ம் தேதி, அறவழியில், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக செயல்படுகிறது.
தமிழ் இனத்தை, தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தி கேவலப்படுத்தும். ஆ ராசா போன்ற ஆளும் கட்சி நபர்களை எல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை, ஜனநாயக ரீதியாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் பொய் வழக்கில் கைது செய்து அச்சுறுத்துகிறார்கள். சில திமுக வழக்கறிஞர்கள் நீதிபதிகளையே அச்சுறுத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, வேலூர், ஈரோடு, கோவை, நீலகிரி, சென்னை என்று தமிழகம் முழுவதும் கைது நடவடிக்கை தொடர்கிறது. இதுவரை 100க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுகவின் அராஜகமும், ஆளும் கட்சி என்பதால் நடத்தும் அத்துமீறலும், கண்டிக்கத்தக்கது. திமுகவின் பொய் வழக்கைக் கண்டும், கைது நடவடிக்கையைக் கண்டும் எந்த பாஜக தொண்டனும் அஞ்சப்போவதில்லை.. தவறை யார் செய்தாலும் தட்டிக் கேட்க பாஜக தயங்காது. தமிழினத் தாய்மார்களை தரம் தாழ்ந்து பேசிய ஆ.ராசாவை கைது செய்யாமல், பாதிக்கப்பட்டவர்கள் மேல் பொய் வழக்கு போட்டு கைது செய்வது எந்த விதத்தில் நியாயம், காலம் உங்களை கண்டிப்பாக தண்டிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. மக்கள் ஆளும் கட்சியின் அநீதிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.







