நடிகர் அஜித்குமார், துணிவு திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான தகவல் உண்மையற்றது என நடிகர் அஜித்குமாரின் மேனேஜர் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமாரின் 61வது திரைப்படமான ‘துணிவு’ ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படமாகும். இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படம் வரும் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதால், நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்-அஜித் படங்கள் ஒரே நாளில் மோதவுள்ளன. இந்த அறிவிப்பால் விஜய், அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்நிலையில் துணிவு படத்தின் புரொமோஷன் பணிகளில் நடிகர் அஜித் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த தகவல் முற்றிலும் உண்மையற்றது என அஜித் குமாரின் மேனேஜர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில், “ஒரு நல்ல படத்திற்கு அதுவே விளம்பரம்! – நிபந்தனையற்ற அன்பு! அஜித்” என பதிவிட்டுள்ளார்.









