தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளின் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் என்பதால் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என ஆர்பிஐ-க்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை அடுத்த வானகரத்தில் கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நாளில் கட்சியின் அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாக காவல்நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் புகார் அளித்தனர். மேலும் கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதாகவும் அறிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் வருவாய்துறையினர் அதிமுக-வின் தலைமை அலுவலகத்தை மூடி சீல்வைத்து சென்றனர். இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை தன்னிடம் தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் விசாரணையின் போது, சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், மறுபுறம் தான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றும் அதிமுகவில் இருந்து தன்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அதிமுகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என ஆர்பிஐ-க்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்ட முறை அதிமுகவின் சட்ட விதிகளுக்கு எதிரானது எனவும் கடந்த
15 ஆண்டுகளாக அதிமுகவின் பொருளாளராக தான் இருந்து வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார். அதிமுக செயற்குழு பொதுக்குழு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி இன்றுவரை தான் ஒருங்கிணைப்பாளர் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
எனவே அதிமுகவின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்குகள் உள்ள வங்கிகளின் பண பரிவர்த்தனையை நிறுத்தி வைக்குமாறும் இது தொடர்பாக சார்புடைய வங்கிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் ஓ.பன்னீர்செல்வம் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல், மக்களவை சபாநாயகருக்கும் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். அதிமுக மக்களவை உறுப்பினர் ரவிந்திரநாத் நீக்கம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி
அனுப்பிய கடிதத்தை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுக்குழுவுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்காத நிலையிலும் நீதிமன்றத்தில்
வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணத்தினாலும் இந்த நடவடிக்கை அதிமுக சட்ட விதிகளுக்கு எதிரானது எனக்கூறி ஓபி ரவீந்திரநாத் நீக்கம் தொடர்பாக அனுப்பிய
கடிதத்தை நிராகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
– இரா.நம்பிராஜன்