அதிமுகவை பயன்படுத்தி தமிழகத்தை வன்முறை களமாக மாற்ற சனாதன சக்திகள் முயற்சி செய்கின்றன. அதிமுகவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில்
அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், கீழே மலர்களால் அலங்கரித்து
வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்களைத் தூவியும் விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது, சி.பா.ஆதித்தனார் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்து இருக்கிறோம்.
தமிழர்கள் வாழ்வுரிமைக்காக போராடியவர்களில் இவரும் ஒருவர். தமிழர்களுக்கு
என்று ஒரு தாயகம் உருவாக வேண்டும் அது தமிழ் ஈழமாக இருக்க வேண்டும் என்று
செயல்பட்டவர்.
அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி பிறந்த நாள் அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,
இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் சேர்ந்து தமிழகம் தழுவிய சமூக
நல்லிணக்க மனித சங்கிலி பேரணியை நடத்த உள்ளதாகவும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். சனாதன சக்திகளை எதிர்க்கிற அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இந்த மூன்று கட்சிகள் மட்டும் நடத்தும் பேரணி என்று எண்ண வேண்டாம். அனைவரும் ஒருங்கிணைந்து சனாதன சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் தீட்டும் சதி திட்டங்களை முறியடிக்க வேண்டும். மக்கள் விரோதத் திட்டங்களை முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா சிலையை அவமதிக்கும் வகையில் செருப்பு மாலை அணிவித்து, காவி துணியால் மூடி அவமதித்தது சங்பரிவார்களின் திட்டமிட்ட வெறிச்செயல். அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். விசிக சார்பில் அதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது ஒரு கலாச்சாரமாக பரவி வருகிறது.
அதற்குப் பின்னால் சங்பரிவார் அமைப்புகள் தான் உள்ளதாக விசிக கருதுகிறது. அவர்களை உடனடியாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய
வேண்டும் என்றார்.
பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கும் சமூக நல்லிணக்க பேரணிக்கு அழைப்பு
விடுத்த அவர், அதிமுகவைப் பயன்படுத்தி தமிழகத்தை வன்முறை களமாக மாற்ற சனாதன சக்திகள் முயற்சி செய்கின்றன. அதிமுகவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குட்டிகரணம் அடித்தாலும் தமிழகத்தில் அவர்கள் ஜம்பம் பலிக்காது என்றார்.
-ம.பவித்ரா








