ஜெய்ப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான அழகிப் போட்டியில் கட்டடத் தொழிலாளியின் மகள் ’மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளியான மனோகர். இவரது மகள் ரக்சயா(20), கல்லூரி படிப்பை முடித்துள்ளார். சிறு வயது முதலே தான் அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற இலட்சியத்தோடு, குடும்ப வறுமையையும் பொருட்படுத்தாமல் தனது சொந்த முயற்சியில் பகுதி நேர வேலை செய்து தன்னை தயார்படுத்தியுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கெளரவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் Forever Star India Awards நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வாகினார். பின்னர் மாநில அளவிலான போட்டி, இந்த மாதம் ஜெய்ப்பூரில் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணான ரக்சயா, ’மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
இதைப் போன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்ற போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். மேலும் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ’மிஸ் இந்தியா’ அழகிப்போட்டியில் இந்தியா முழுவதும் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகிய அனைவரும் ஸ்டேஜ் ஷோ செய்ய உள்ளனர். இதில் தேர்வாகும் நபர் ’மிஸ் இந்தியா’ பட்டத்தை வெல்வார். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ’மிஸ் இந்தியா’ பட்டத்தை தட்டிச் செல்வேன் என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ரக்சயா.








