அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு… அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் 7-வது பரபரப்பான விமான நிலையமாக கருதப்படுகிறது. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் (ஜுன் 12) மதியம 1.38 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். விமானத்தை சபீர் சபர்வால் என்ற விமானி ஓட்டினார். அவருக்கு துணையாக கிளைவ் குந்த் என்ற துணை விமானியும் இருந்தார்.

இந்த விமானம் வானில் பறந்த ஒரு சில நிமிடங்களிலே அதாவது தரையில் இருந்து 825 அடி உயரத்தை எட்டியபோது விமானியிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு ‘மே டே அழைப்பு’ வந்தது. ‘மே டே அழைப்பு’ என்பது சர்வதேச அளவில் அபாயத்தை தெரிவிக்கவும் உடனடி உதவி வேண்டும் என்பதைக் குறிக்கும் ரேடார் சிக்னலாகும். இதனை ஏற்றுக்கொண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மீண்டும் விமானியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் விமானத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அவர்களால் விமானியை தொடர்பு கொள்ள இயலவில்லை.

சில நிமிடங்களில் அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதில் இருந்து எழுந்த தீப்பிழம்புகளும், கரும்புகையும் கிளம்பியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவா்களில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் ஒருவா். இந்தியப் பயணிகள் 169 பேருடன் பிரிட்டன் (52), போா்ச்சுகல் (7), கனடா (1) பயணிகளும் உயிரிழந்தனா். பிரிட்டன் குடிமகனான விஷ்வாஸ் குமாா் ரமேஷ் மட்டும் உயிா்பிழைத்தாா்.
விபத்துக்குள்ளான ஏா் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி, அது விழுந்த இடமான பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மேற்கூரையில் மீட்கப்பட்டது. மேலும், அதனுடன் 29 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இதன்மூலம், இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. இவா்களில் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் (10 பேர்), விடுதிக் கட்டடம் அருகே தேநீா் கடை நடத்தும் குடும்பத்தைச் சோ்ந்த சிறுவன் உள்ளிட்டோரும் அடங்குவா்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.