விவசாயிகள் தன்னிறைவு அடையும் வகையில் வேளாண் நிதி நிலை அறிக்கை அமையும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வரும் 14ஆம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் விவசாய அமைப்புகளுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் சேப்பாக்கம் வேளாண்துறை இயக்குநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
வேளாண் தனிநிதி நிலை அறிக்கை தொடர்பாக விவசாய சங்கங்கள், அரசியல் கட்சி சார்ந்த விவசாய சங்கங்களின் கருத்துகள் இன்று கேட்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல், வேளாண் தனி நிதிநிலை அறிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிப்படி 14 ம் தேதி, வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் தனி நிதி நிலை அறிக்கை தொடர்பாக வேளாண் விளைபொருள் சார்ந்த வியாபார, ஏற்றுமதி சங்கங்களிடமும் பேசப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு 10 ஆண்டுக்கு தேவையான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும். விவசாயிகள் தன்னிறைவு அடைய, தலை நிமிர உதவும் பட்ஜெட்டாக இது இருக்கும்.
தமிழகத்தில் 48,000 வாகனத்தில் கொரோனா காலகட்டத்தில் விவசாய விளைபொருட்கள் விற்க அனுமதி வழங்கப்பட்டது. இளைஞர்களுக்கு வேளாண் ஏற்றுமதி தொடர்பாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்ட எதிர்ப்பு தொடர்பில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது. கரும்பு அறுவடையில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்வது தொடர்பான அம்சங்கள் நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும்.
கரும்பு விவசாயிகளுக்கு 1200 கோடி தொகை நிலுவையில் உள்ளது. நிலுவைத் தொகை பிரச்சனையில் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கலான பிறகு நலிவுற்ற தனியார் கரும்பு ஆலைகளுடன் அரசு சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேச்சுவார்த்தை மூலம் நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.







