இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்துவதில் அக்னிபாத் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் தற்காலிகமாக பணியாற்றும் வகையில் மத்திய அரசு அக்னிபாத் எனும் திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தில் சேர விண்ணப்பித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாதுகாப்பு அமைச்சகத்தின் தரவுகளின்படி, முதற்கட்டமாக முப்படைகளிலும் உள்ள 46,000 பணியிடங்களுக்கு 54 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தில் இணைந்துள்ள முதல் குழுவினருடன், காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அக்னிபாத் திட்டத்தில் இணைந்துள்ள இளைஞர்களை வரவேற்றுப் பேசிய அவர், அனைவருக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நம்முடைய ராணுவத்தை வலுப்படுத்துவதிலும், எதிர்கால சவால்களுக்கு தயார்படுத்துவதிலும் அக்னிபாத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார். மேலும் இளம் அக்னி வீரர்கள், இந்திய ராணுவத்தை கூடுதல் இளமையானதாகவும், தொழில்நுட்ப அறிவு சார்ந்ததாகவும் மாற்றுவர் என்று தெரிவித்தார்.
அக்னிபாத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் அனுபவம், இளைஞர்களின் வாழ்க்கைக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்று தெரிவித்த அவர், இந்த திட்டம் பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் என்றும், முப்படைகளிலும் பெண் அக்னிவீரர்களைப் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார்.