அமெரிக்காவில் ஒரு சிறுவன் கைத்துப்பாக்கியை வைத்துக்கொண்டு விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில், நாடு முழுவதும் அண்மைக் காலமாகவே துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஜனவரி 7ஆம் தேதி, அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில், 30 வயது ஆசிரியரை, 6 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள பீச் குரோவ் பகுதியில் கைத்துப்பாக்கியுடன் சிறுவன் ஒருவன் விளையாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் தன்னுடைய வீட்டின் முகப்பு அறையில், கைத்துப்பாக்கியை வைத்து விளையாடி கொண்டிருந்தபோது, தன்னை நோக்கியும், பிற இடங்களை நோக்கியும் சுடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
சிறுவன் வைத்திருந்த கைத்துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பப்படாமல் இருந்ததால் சிறுவனுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியானதை அடுத்து, சிறுவனின் தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருந்து வரும் நிலையில், இதனை தடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.