திருச்செந்தூர் முருகன் கோயிலில் 6 ஆண்டுகளுக்கு பின் ‘தாராபிஷேகம்’!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 6 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட ‘தாராபிஷேகம்’ இன்று மீண்டும் தொடங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.  இக்கோயிலில் விஸ்வரூபம், …

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 6 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட ‘தாராபிஷேகம்’ இன்று மீண்டும் தொடங்கியது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.  இக்கோயிலில் விஸ்வரூபம்,  உதய மார்த்தாண்டம்,  முதல் காலசந்தி,  உச்சிகாலம்,  சாயரட்சை,  அர்த்த ஜாமம்,  ஏகாந்தம், பள்ளியறை தீபாராதனை போன்ற பூஜைகள் தினசரி வழக்கமாக நடைபெறும் பூஜைகளாகும்.

அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறப்பட்டு காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10.30 மணி மற்றும் இரவு 7.15 மணி என 3 வேளைகளில் சுவாமிக்கு அபிஷேகம் நடந்து வருகிறது.  இந்த அபிஷேகங்களில் பக்தர்கள் பணம் செலுத்தி சிறப்பு தரிசனத்திலும்,  இலவசமாக பொது தரிசனப் பாதையிலும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோயில் கருவறையில் மூலவருக்கு ஏற்படும் கடும் வெப்பத்தை தணிக்கும் வகையில் நடைபெற்று வந்த ‘தாராபிஷேகம்’ எனும் பூஜை கடந்த 2018-ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.  இந்த தாராபிஷேகம் இன்று (பிப்.28) மீண்டும் தொடங்கியது.  இதனைத் தொடர்ந்து, கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜையும் நடைப்பெற்றன.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.